அமெரிக்கா நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நேற்று மேற்கொண்ட வன்முறையில் பலியான பெண் விமானப் படையைச் சேர்ந்த ட்ரம்பின் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எம்.எஸ். பாபிட் என்ற இந்த விமானப் படையைச் சேர்ந்த பெண் இறப்பதற்கு முதல் நாள் தனது சமூக ஊடகங்களில் தலைநகர் வொஷிங்டனில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் புயலாகத் திரளவுள்ளனர். இந்தப் புயல் 24 மணிநேரங்களில் வொஷிங்டனில் மையங்கொள்ளவுள்ளது. எந்த சக்தியாலும் இதனைத் தடுக்க முடியாது எனவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய ட்ரம்ப ஆதரவு வன்முறைக் கும்பலில் ஒருவராக 35 வயதான எம்.எஸ். பாபிட் உள்ளடங்கியிருந்தார்.
அமெரிக்க விமானப்படையின் சிரேஷ்ட உறுப்பினரான பாபிட் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கடமையில் ஈடுபட்டவர். பின்னர் குவைத் மற்றும் கட்டாருக்கு அனுப்பப்பட்ட தேசிய படையினருடன் அவரும் சென்றிருந்தார் என அவரது முன்னாள் கணவர் திமோதி அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.